4-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாதவரை லாரிகளை இயக்க மாட்டோம்


4-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாதவரை லாரிகளை இயக்க மாட்டோம்
x
தினத்தந்தி 19 Sep 2019 10:45 PM GMT (Updated: 19 Sep 2019 9:47 PM GMT)

கன்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாதவரை லாரிகளை இயக்க மாட்டோம் என டிரைலர் லாரி உரிமையாளர்கள் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

திருவொற்றியூர்,

சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம் ஆகிய துறைமுகங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான கன்டெய்னர்கள் ஏற்றுமதிக்காகவும், இறக்குமதிக்காகவும் கையாளப்படுகின்றன.

அதிகளவில் எடை ஏற்ற மாட்டோம் எனவும், ஒரு லாரியில் ஒரு கன்டெய்னரை மட்டுமே ஏற்றுவோம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ந்தேதி முதல் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது.

பேச்சுவார்த்தையில் தீர்வு

இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் ராயபுரத்தில் உள்ள டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அனைத்து கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி 20 அடி கன்டெய்னருக்கு 40 அடி கன்டெய்னர் வாடகை கொடுக்க வேண்டும். 40அடி கன்டெய்னருக்கு கூடுதலாக 1,000 ரூபாய் வழங்கவேண்டும். காலி கன்டெய்னருக்கு ரூ.3,500 வழங்கவேண்டும்.

ஒரு லாரியில் ஒரு கன்டெய்னரை மட்டுமே ஏற்றுவோம். அதற்கு துறைமுக நிர்வாகமும், துறைமுக அதிகாரிகளும் ஆலோசித்து, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தீர்வு ஏற்பட்டால் உடனடியாக லாரிகளை இயக்குவோம். தீர்வு ஏற்படாத பட்சத்தில் லாரிகள் ஓடாது. வேலை நிறுத்தம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story