தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு


தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Sep 2019 11:15 PM GMT (Updated: 20 Sep 2019 9:02 PM GMT)

தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடமாக உள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

சிவகாசியில் அண்ணா பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

உலகில் உள்ள 10 கோடி தமிழர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும். அதை தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. தான் அனைத்து இடங்களில் வெற்றி பெறும். அதற்கான குழு தற்போதே அமைக்கப்பட்டுவிட்டது. அந்த குழுவின் அறிவுரைப்படி நடந்தால் நிச்சயம் அனைத்து பதவிகளையும் அ.தி.மு.க.வினரே கைப்பற்றுவார்கள்.

தற்போது தி.மு.க. வாக்குவங்கிக்காக ஜாதி, மதத்தை தூண்டி விட்டு அரசியல் செய்கிறது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் இதை தி.மு.க. செய்தது. இதனால் தான் அந்த தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் உண்மையான வெற்றி அ.தி.மு.க.வுக்கு தான்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க. கையில் எடுத்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க. முன்னணி தலைவர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் இந்தி, ஆங்கிலத்துக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்தியை பிரதான பாடமாக கற்றுத் தரும் இவர்கள் எப்படி இந்தியை எதிர்த்து போராட முடியும். கடந்தநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டனர்.

ஆனால் நான் திருத்தங்கல் நகரமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்த காலத்தில் இருந்து தற்போது வரை தமிழில்தான் கையெழுத்து போட்டு வருகிறேன். தமிழகத்தில் இந்தியை திணித்தால் அதை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், தலைமைகழக பேச்சாளர் சுந்தரபாண்டியன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், ஒன்றிய செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், பலராமன், புதுப்பட்டி கருப்பசாமி, நகர செயலாளர்கள் அசன்பதுருதீன் (சிவகாசி), பொன்சக்திவேல் (திருத்தங்கல்), பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் கணேசன், மாவட்டமகளிர் அணி செயலாளர் சுடர்வள்ளி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாண்டியராஜன், லட்சுமிநாராயணன், சிங்கராஜ், யுவராஜ், வேண்டுராயபுரம் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story