தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல ‘இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்’ - உதயநிதி ஸ்டாலின் பேட்டி


தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல ‘இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்’ - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2019 11:15 PM GMT (Updated: 21 Sep 2019 6:47 PM GMT)

தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். அப்போது தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. போராட்டம் அறிவித்தது. அதே நேரம் உள்துறை மந்திரி அமித்ஷா, அவரது கருத்தை திரும்ப பெற்றார். அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறியதுடன், இந்தியை 2-வது மொழியாக கற்க வேண்டும் என்று கூறினேன் என அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் தொடர்ந்து எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அப்போது பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய கருத்து குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், ‘கடந்த 2 நாட்களாக நான் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளில் தீவிரமாக இருந்ததால், அந்த விழாவை பார்க்கவில்லை. எனவே நடிகர் விஜய் என்ன கருத்து கூறினார் என்பது தெரியவில்லை. தெரியாமல் பதில் கூறுவது சரியாக இருக்காது’ என்றார்.

இதுபோல் நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது குறித்த ஒரு கேள்விக்கு, ‘இந்த கேள்வியை என்னிடம் கேட்பதே சரியில்லை. அவரிடம் கேட்க வேண்டும்’ என்று சிரித்த படியே பதில் அளித்தார்.

பின்னர் காளைமாடு சிலை அருகே நடந்த தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுசாத்தியமா என்று என்னிடம் கேட்டார்கள். தலைவர் கலைஞரின் படம், அவருடைய கொள்கைகள், நம் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான நம்பிக்கை, இளைஞர் அணியின் முத்திரை ஆகியவை இளைஞர்களை தானாக கொண்டு வந்து சேர்க்கும். கடந்த 14-ந் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தொடங்கப்பட்டு, அவற்றை பார்வையிட்டு வருகிறேன்.

நான் சென்ற எல்லா இடங்களிலும் இளைஞர்கள் தரும் ஆதரவு, நாம் 30 லட்சம் உறுப்பினர்களையும் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

நான் செல்லும் இடங்களில் இளைஞர்கள் என்னை நெருக்கியடித்துக்கொண்டு பார்க்கிறார்கள். இதனால் எனக்கு காயம் ஆகிறது என்று மூத்த தலைவர்கள் வருந்தினார்கள். ஆனால், என் மீது உங்களுக்கு இருக்கும் உரிமை, பாசம் ஆகியவற்றால் என்னோடு இடித்துக்கொண்டு வருகிறீர்கள். உங்கள் அன்புக்கு எப்போதும் நான் தலைவணங்குவேன். இளைஞர்களாகிய நீங்கள் சரியான பாதையை தேர்ந்து எடுத்து, சரியான இடத்தில் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். அடுத்து நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, நமது தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்வார். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். உங்கள் எதிர்பார்ப்புகளை தி.மு.க. இளைஞர் அணி நிறைவேற்றும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி ஆகியோர் பேசினார்கள்.

Next Story