தெற்குநாணலூர்-குலமாணிக்கம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு


தெற்குநாணலூர்-குலமாணிக்கம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 8:37 PM GMT)

கோட்டூர் அருகே தெற்குநாணலூர்-குலமாணிக்கம் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என20 கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை 23 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சாலை உள்ளது. மண்ணுக்குமுண்டான், மாரிநகரி, தெற்குநாணலூர் உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை தினமும் பயன் படுத்தி வருகின்றனர். இந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை தற்போது பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காணப்படுகிறது.குறிப்பாக தெற்குநாணலூர் முதல் குலமாணிக்கம் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக காட்சி அளிக்கின்றது.

பஸ் வசதி

கடந்த 2006-ம் ஆண்டு முதல் திருத்துறைப்பூண்டியில் இருந்து களப்பால், பெருகவாழ்ந்தான் வழியாக அரசு பஸ் ஒன்று சென்று வந்தது. சாலை பழுதடைந்ததால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் அரசு பஸ் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.இதனால் கடந்த 11 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பஸ் வசதி இல்லாமல் சிங்கமங்களம், வேதபுரம், வங்கத்தான்குடி என தினமும் 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வரும் அவலநிலை உள்ளது. சாலையை சீரமைக்க கூறி சம்பந்தப்படட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெற்குநாணலூர், குலமாணிக்கம் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 20 கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story