திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி


திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 9:20 PM GMT)

திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஒதிக்காட்டை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி பொம்மி (வயது 45). நேற்று முன்தினம் பொம்மி, தன்னுடைய மகன் ஆல்பர்ட் (24) உடன் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் ஒதிக்காடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருவள்ளூரை அடுத்த ஈக்காடுகண்டிகை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். ஆல்பர்ட் படுகாயம் அடைந்தார். அவரது தாயார் பொம்மி லாரி சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தாய், மகன் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பொம்மி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story