திருவள்ளூரில் தகவல் அறிவும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம் - மாநில தகவல் ஆணையர் தலைமையில் நடந்தது


திருவள்ளூரில்  தகவல் அறிவும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம் - மாநில தகவல் ஆணையர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 PM GMT (Updated: 22 Sep 2019 5:56 PM GMT)

திருவள்ளூரில் தகவல் அறிவும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகத்தின் பொதுதகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அனைத்து அலுவலர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் கையேடுகள் வழங்கப்பட்டது.

இதில் பங்கேற்றவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் அவசியம், அதன் பயன்கள் மற்றும் இந்த சட்டத்தின் மூலம் நிர்வாக வெளிப்படைத்தன்மை பெற்றுள்ளது என்ற விவரங்களை விளக்கமாகவும், கோர்ட்டு வழக்கின் தீர்ப்புகளையும் விளக்கி கூறினர்.

மேலும் அலுவலர்கள் உரிய காலத்திற்குள் மனுதாரர்களுக்கு தகவல் வழங்க அறிவுறுத்தப்பட்டது. தகவல் ஆணையத்தின் 2-வது மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்களுக்கு மாநில தகவல் ஆணையரால் விசாரணை நடத்தப்பட்டு மனுதாரர்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலர்களுக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விளக்கத்தை அளித்தும் அலுவலர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தும் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், மாவட்ட அளவிலான மேல்முறையீட்டு அலுவலர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story