நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? விக்கிரமராஜா பேட்டி


நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2019 11:15 PM GMT (Updated: 22 Sep 2019 7:05 PM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மளிகை சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் 47-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மகாசபை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் சிலவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது, ஜி.எஸ்.டி. வரி குறைப்பும், விதிகளில் மாற்றங்களும் செய்யப்பட்டு இருப்பதை வரவேற்று மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். புளி, கிரைண்டர், பார்ட்டி ஹால், அறை வாடகை போன்ற வற்றிற்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை குறைத்துள்ளது.

உணவக வாடகை கட்டிடங்கள் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதம் என்பது உணவக தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய நிதி மந்திரியும், மாநில அரசும் கவனத்தில் கொண்டு லட்சக்கணக்கான மரபுசாரா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் உணவக தொழிலை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபராதம் விதிக்கக்கூடாது

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை களைந்திடவும், வணிகர் விரோத சட்டங்களை நீக்கியும் அரசு உதவிட வேண்டும். தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளது. அது என்னென்ன? பிளாஸ்டிக் பொருட்கள் என தெரிவிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கடைக்குள் புகுந்து ஆய்வு செய்து அவர்களின் விருப்பம்போல் அபராதம் விதிக்கின்றனர். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுவரை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் கடைக்குள் சென்று அபராதம் விதிக்கக்கூடாது. அதையும் மீறி அபராதம் விதித்தால் தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும். இதில் முதல் போராட்டம் சேலத்தில் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

யாருக்கு ஆதரவு?

வணிகர்களின் ஆலோசனைக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து பேசி எங்களது கோரிக்கைகளை அரசியல் கட்சி களிடம் எடுத்துக்கூறுவோம். இதை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்போம்.

இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

Next Story