வையம்பட்டி அருகே மழை பெய்தும் நீர்மட்டம் உயராத பொன்னணியாறு அணை விவசாயிகள் வேதனை


வையம்பட்டி அருகே மழை பெய்தும் நீர்மட்டம் உயராத பொன்னணியாறு அணை விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 PM GMT (Updated: 22 Sep 2019 8:12 PM GMT)

வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணையில் மழை பெய்தும் கூட அணையின் நீர்மட்டம் ஒரு அடி கூட உயராதது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டத்தின் எல்லையிலும், கரூர் மாவட்டத்தின் தொடக்கத்திலும் உள்ளது பொன்னணியாறு அணை. செம்மலை, பெருமாள் மலை ஆகிய இரண்டு மலைகளின் அடிவாரத்தில் உள்ள அணைப்பகுதியின் நீர்ப்பிடிப்பு பகுதி கரூர் மாவட்டத்திலும், பாசன பகுதியானது திருச்சி மாவட்டத்தில் முகவனூர் ஊராட்சியிலும் அமைந்துள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அணையின் நீர்மட்டம் 51 அடியாகும்.

2 மதகுகளை கொண்ட அணையில் 120 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். இதுமட்டுமின்றி இந்த அணையின் மூலம் பழைய ஆயக்கட்டு 271 ஏக்கரும், கால்வாய் மூலம் 1,800 ஏக்கர் என மொத்தம் 2,071 ஏக்கர் பாசன வசதி பெறும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் நீரானது ஏப்ரல் வரை தொடர்ந்து நீடிக்கும். இதன் மூலம் அந்த பாசன வசதி பெரும் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.

மழை

ஆனால் அணையில் அதிக அளவில் சேறு உள்ளதால் அதை அகற்றி தூர்வாரிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் பல ஆண்டு கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. இதனால் சுமார் 10 அடிக்கு மேல் சேறும் சகதியுமாக உள்ளது. இதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்தே காணப்படுகின்றது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு கடந்த ஒரு வாரமாக மழை சற்று அதிகமாகவே உள்ளது. இதே போல் பொன்னணியாறு அணையை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 54 மில்லிமீட்டர் மழையும், அணைப்பகுதியில் 17 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

நீர்மட்டம் உயரவில்லை

கடவூர், சுக்காம்பட்டி, ராஜாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் இடைவிடாத மழை பெய்தாலே அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடிக்கும் அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த பகுதிகளிலும் மழை போதிய அளவில் பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. ஆகவே தற்போது அணையின் நீர்மட்டம் 23.93 அடியாக மட்டுமே உள்ளது. வரும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் சுமார் 7 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. பல ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் இருந்தும் கூட விவசாயத்தை விட்டு வெளியே வேறு வேலைகளுக்கு செல்லும் நிலை உள்ளது. அணையில் போதிய நீர் இன்றி நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் குறைந்தே காணப்படுகின்றது.

Next Story