இரட்டை ரெயில் பாதை பணிக்கு கண்மாய்களில் மண் அள்ள தடை; மதுரை, விருதுநகர், தூத்துக்குடி கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


இரட்டை ரெயில் பாதை பணிக்கு கண்மாய்களில் மண் அள்ள தடை; மதுரை, விருதுநகர், தூத்துக்குடி கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 23 Sep 2019 10:45 PM GMT (Updated: 23 Sep 2019 6:38 PM GMT)

இரட்டை ரெயில் பாதை பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் கண்மாய்களில் மண் அள்ள தடை விதித்தும், இதுதொடர்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ரெயில்வேயில் மேம்பாட்டு பணிகளை ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சில பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி வரை இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி சுமார் ரூ.170 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடக்கிறது.

இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும் தனியார் நிறுவனம், சில கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ளுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல சட்டவிரோதமாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், “மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் கண்மாய்களில் மண் அள்ள தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story