துப்புரவு பணியாளர் தேசியநல ஆணைய உறுப்பினர் ஆய்வு பஸ் நிலையத்தில் துர்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு


துப்புரவு பணியாளர் தேசியநல ஆணைய உறுப்பினர் ஆய்வு பஸ் நிலையத்தில் துர்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 9:25 PM GMT)

துப்புரவு பணியாளர் தேசியநல ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி நேற்று வேலூர் புதிய பஸ்நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது துர்நாற்றம் வீசுவதையும், சுகாதாரச் சீர்கேட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் குறைகளை கேட்டறியவும், துப்புரவு பணிகளை பார்வையிடவும் துப்புரவு பணியாளர் தேசியநல ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி நேற்று வேலூர் வந்தார்.

அவர், முதலில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் உள்ள காந்திநகரில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டார். அங்கு பணியில் இருந்த மகளிர் சுயஉதவி குழுவினரிடம் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது தங்களுக்கு தினக்கூலியாக ரூ.250 மட்டுமே வழங்கப்படுவதாக மகளிர் குழுவினர் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு வருகிற 1-ந் தேதியில் இருந்து ரூ.320-ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

துர்நாற்றம்

பின்னர் வேலூர் புதிய பஸ்நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பஸ்நிலையத்தில் கழிவறைகளின் கழிவுநீர் திறந்தவெளியில் தேங்கி நிற்பதையும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, துர்நாற்றம் வீசுவதையும், சுகாதாரச் சீர்கேட்டை தடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் பஸ்நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையை பார்வையிட்டபோது, அங்கு தண்ணீர் வசதி, மின்விசிறிகள் இல்லாததை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர்களில் சிலர் துணியால் ஆன கையுறையும், சிலர் ரப்பரால் ஆன கையுறையும் அணிந்திருந்தனர்.

அதைபார்த்த அவர், ரப்பரால் ஆன கையுறை மட்டுமே அணிய வேண்டும் என்றார். மேலும் சீருடை வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், கூலி வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், உதவி கமிஷனர் மதிவாணன், நகர்நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரசு மருத்துவமனை

அதைத்தொடர்ந்து அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு நடைபெற்றுவரும் புதிய கட்டிட பணிகளையும், விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவையும் பார்வையிட்டு, பணியாளர்களின் ஊதியம் குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவக் கல்லூரி டீன் செல்வி, துணை முதல்வர் முகமதுகனி, கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அவர் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் குறித்து பெல் நிறுவன இயக்குனரிடம் கேட்டறிந்தார்.

ஆய்வுக்கூட்டம்

அதைத்தொடர்ந்து மாலையில் வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய, மாநில அரசின் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு துப்புரவு பணியாளர் தேசியநல ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி தலைமை தாங்கி, வேலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மருத்துவ சிகிச்சைகள், நலத்திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், துப்புரவு பணியாளர்களுக்கு சொந்த இடத்துடன் கூடிய வீடுகள் கட்டவும், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வேணுசேகரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் திருஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story