சேலத்தில், அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து சாவு


சேலத்தில், அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 23 Sep 2019 9:43 PM GMT (Updated: 23 Sep 2019 9:49 PM GMT)

சேலத்தில், அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

சேலம்,

சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற போக்கு வரத்து கழக ஊழியர்களுக்கு பணப்பயன்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்கு வரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர் மணி(வயது 60) என்பவர் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்த சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது ஏற்கனவே மணி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story