கல்லூரி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளர்கள் 2 பேர் பலி கருங்கல் அருகே பரிதாபம்


கல்லூரி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளர்கள் 2 பேர் பலி கருங்கல் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 24 Sep 2019 10:15 PM GMT (Updated: 24 Sep 2019 7:20 PM GMT)

கருங்கல் அருகே கல்லூரி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

கருங்கல்,

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை மூலச்சல்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன் என்ற கண்ணன் (வயது 46). அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45). இருவரும் தச்சு தொழிலாளர்கள் ஆவார்கள்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை வேலையை முடித்து விட்டு, கருங்கல் அருகே உள்ள அரசகுளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். கருங்கல், திரேஸ்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது.

2 பேர் சாவு

அப்போது எதிரே கல்லூரி பஸ் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும்-மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜெயசந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கிருஷ்ணகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கருங்கலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது கிருஷ்ணகுமாரும் இறந்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்ததும், கருங்கல் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இறந்த இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story