மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும்; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு


மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும்; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 24 Sep 2019 11:15 PM GMT (Updated: 24 Sep 2019 8:45 PM GMT)

தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை பெற மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூரு ஜெயநகரில் தனியார் கல்வி நிறுவனத்தின் 75-ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகத்தை மாற்றும் மிகப்பெரிய ஆயுதம் கல்வி தான். இது பொதுமக்களின் வாழ்க்கையை மாற்றுவதோடு, அதிகாரத்தையும் வழங்குகிறது. கல்வி தான் சமூகம் மற்றும் பொருளாதார நடைமுறைக்கான அடித்தளம் ஆகும். இதனால் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது முக்கியமானதாகும்.

கல்வி தான் ஜனநாயகத்தை காப்பதுடன், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பது தான் உண்மை. இருப்பினும் ஏராளமானவர்களுக்கு கல்வி கிடைப்பது இல்லை. இதை நாம் போக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொருவரும் தங்களுக்கான இலக்குகளை அடைய முடியும். கல்வி என்பது புத்தகத்தில் இருப்பதை படிப்பது மட்டுமில்லை. அதையும் தாண்டி உண்மையை புரிந்து கொண்டு புதுமையை கண்டுபிடிப்பதும் கல்விதான்.

இன்றைய சூழலில் கல்விக்கு அதிக செலவு செய்யப்படுகிறது. ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாக கல்வி இருக்கும் நிலையில் இது சரியான முறை அல்ல. இதனால் குறைந்த செலவில் தரமான கல்வியை வழங்க தொழிற்சங்கத்தினர், பிரபல நிறு வனங்கள், தொழில் முனைவோர், தொண்டு நிறுவனத்தினர் முன்வர வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும். இது தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள அவர்களுக்கு உதவி செய்யும். இந்தியாவுக்கான புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் தெரிவிக்கலாம். வருகிற கல்வி முறை 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றப்படியும், இந்தியாவின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story