7 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


7 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:00 PM GMT (Updated: 26 Sep 2019 7:24 PM GMT)

7 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நாகையில் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 7 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நாகை பழைய பஸ் நிலையம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், கிளை செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 7 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.

பணி நேரத்தை குறைக்க கூடாது

பி.எஸ்.என்.எல். நிர்வாகம் 50 சதவீதம் ஒப்பந்த தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை நிர்வாகம் திரும்ப பெற வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ரகுமான், ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story