அரசுக்கு நிலம் விற்றதில் மோசடி: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேருக்கு 1 ஆண்டு சிறை


அரசுக்கு நிலம் விற்றதில் மோசடி: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேருக்கு 1 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 26 Sep 2019 10:15 PM GMT (Updated: 26 Sep 2019 8:57 PM GMT)

அரசுக்கு நிலம் விற்றதில் மோசடி செய்த வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

குளித்தலை,

கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகம் சார்பில் வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக குளித்தலை பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு இடம் தேர்வு நடந்தது. அப்போது குளித்தலை அருகேயுள்ள கணக்கப்பிள்ளையூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 70) என்பவர் தனக்கு சொந்தமாக அய்யர்மலை சிவாயம் சாலையில் உள்ள 3 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை தனது பவர் ஏஜெண்டான நச்சலூரைச் சேர்ந்த தேவேந்திரன் (55) என்பவர் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு விற்றார்.

இதையடுத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியராக அப்போதிருந்த கலியமூர்த்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான பணியை மேற்கொண்டபோது, ராஜமாணிக்கத்தின் முதல் மனைவியான சித்ரா என்பவர் தனது கணவர் விற்ற நிலத்தில் தனக்கு பங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராஜமாணிக்கம் மோசடி செய்து தனது பவர் ஏஜெண்டான தேவேந்திரன் மூலம் அரசுக்கு நிலத்தை விற்றது தெரியவந்துள்ளது.

ஒரு ஆண்டு சிறை

இதையடுத்து மோசடி செய்து அரசுக்கு நிலம் விற்றதாக ராஜமாணிக்கம், தேவேந்திரன் மற்றும் இந்த நிலத்திற்கு வில்லங்கம் இல்லை என்று சான்றழித்த அப்போதிருந்த சத்தியமங்கமலம் கிராம நிர்வாக அலுவலரான மாணிக்கம் (65) ஆகிய மூவர் மீதும் வட்டாட்சியர் கலியமூர்த்தி மாவட்ட குற்றபிரிவு போலீசாரிடம் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இதுதொடர்பான வழக்கு குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்தநிலையில் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜமாணிக்கம், தேவேந்திரன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாணிக்கம் ஆகிய 3 பேருக்கும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் அளித்து நேற்று தீர்ப்பு கூறினார். 

Next Story