7 பெண்களை மிரட்டி பலாத்காரம்: சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு


7 பெண்களை மிரட்டி பலாத்காரம்: சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
x
தினத்தந்தி 27 Sep 2019 10:09 PM GMT (Updated: 27 Sep 2019 10:09 PM GMT)

சேலத்தில் 7 பெண்களை மிரட்டி பலாத்காரம் தொடர்பாக ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். கடந்த 25-ந் தேதி இளம்பிள்ளை பஸ் நிறுத்தம் அருகே கழிவறைக்கு சென்ற முருகேசன் என்பவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக மோகன்ராஜ் மீது மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, மோகன்ராஜ் தனது வீட்டிற்கு அழைத்து வந்து படுக்கை அறையில் மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரது செல்போனை வாங்கி பார்த்தனர். அதில், கல்லூரி மாணவி உள்பட 7-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் உல்லாசம் அனுபவித்தது அம்பலமானதாக கூறப்படுகிறது. இது போலீஸ் அதிகாரிகளை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் மோகன்ராஜ் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்க முன்வரவில்லை.

இந்தநிலையில், ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் மோகன்ராஜின் வீடு மற்றும் ஆட்டோ நிறுத்தம் பகுதிக்கு போலீசார் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மோகன்ராஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளதும், தற்போது அவர்கள் இவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர் காகாபாளையம் பகுதியில் அரசியல் கட்சி செல்வாக்குடன் ‘ஹாயாக’ வலம் வந்ததும், ஆட்டோவில் ஏறும் பெண்களை மயக்கி அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். பின்னர் தனது வலையில் சிக்கும் பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், மோகன்ராஜின் நண்பரான ஆட்டோ டிரைவர் ஒருவரும் பல பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர் களை மோகன்ராஜுக்கு விருந்தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், மோகன்ராஜ் பலாத்காரம் செய்த பெண்களை தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம் அரங்கேறியதாகவும் சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, வீடியோவில் மோகன்ராஜ் மிரட்டி பலாத்காரம் செய்யும் பெண் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் மோகன்ராஜின் காம லீலைகளை தாங்க முடியாமலும், இதுபற்றி வெளியிலும் சொல்ல முடியாமலும் அந்த பெண் பரிதவித்து வந்துள்ளார். இது சம்பந்தமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அந்த பெண் வந்து மோகன்ராஜ் மீது புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் போலீசார் அதை பொருட்படுத்தாமல் விட்டு விட்டனர். ஆனால் தற்போது பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து சில பெண்கள் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது மறைமுகமாக போலீசாரிடம் புகார்களை தெரிவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மோகன்ராஜ் மூலம் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை போலீசார் ரகசியமாக தயாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் ஒரு பெண்ணை மிரட்டி பலவந்தமாக உல்லாசம் அனுபவிப்பது போன்ற வீடியோ காட்சியில் உள்ள பெண் அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு சென்றோம். அப்போது அந்த பெண்ணை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது அவர் பதில் சொல்ல மறுத்து விட்டார். மேலும் புகார் கொடுக்கவும் மறுக்கிறார். மீறி கேட்டால் அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார். இருப்பினும் விசாரணை நடத்தி வருகிறோம்.

மோகன்ராஜிடம் விசாரணை நடத்தியபோது வீடியோவில் பதிவாகி உள்ள பெண்ணுக்கும், தனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி தெரிந்ததும் எனது 2 மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில் என்னிடம் பேசுவதை அந்த பெண் நிறுத்தி விட்டாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கள்ளக்காதலியிடம் உல்லாசம் அனுபவிப்பதை வீடியோவில் பதிவு செய்து அதை அவளிடம் காண்பித்து மிரட்டினால் அவள் வேறு யாருடனும் பேச மாட்டாள் என்று நினைத்து உல்லாசம் அனுபவிப்பதை வீடியோவாக பதிவு செய்தேன்.

நான் குடிபோதையில் இருந்தபோது எனது செல்போனில் பதிவாகி இருந்த அந்த வீடியோவை எனது நண்பரிடம் காண்பித்தேன். அவர் எனக்கு தொழில் போட்டியில் எதிரியான வேறு ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு இந்த வீடியோவை அனுப்பி உள்ளார். என்னை பழிவாங்குவதற்காக அந்த நபர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். மற்றபடி நான் 7 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறுவதெல்லாம் பொய்யான தகவல் என்று கூறினார். இருப்பினும் மோகன்ராஜ் கூறுவது உண்மைதானா? பொய்யென்றால், இதுவரை அவர் எத்தனை பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் செல்போனை வைத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story