போளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது - 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


போளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது - 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Sep 2019 10:30 PM GMT (Updated: 29 Sep 2019 3:15 AM GMT)

போளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆலங்காயத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது

போளூர், 

போளூரை சேர்ந்தவர் தயாளன், கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் இரவு மாட்டுப்பட்டி தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி தயாளனிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார்.

இதுகுறித்து தயாளன் போளூர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வசூர் கூட்ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த வெல்லகுட்டை துரிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 27) என்பதும், தயாளனிடம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதும், மேலும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சங்கரை கைது செய்து, போளூர் நற்குன்று மேடு பகுதியில் புதர்களிலும், தும்பக்காடு காட்டு பகுதியிலும் மறைத்து வைத்திருந்த 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story