பள்ளி விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


பள்ளி விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 5:03 PM GMT)

பள்ளி விடுமுறை, வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல், 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவும். இதை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டும்.

இந்தநிலையில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அதிகாலை முதலே மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

இதற்கிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பகல் நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. மேலும் வட்டக்கானல், பாம்பார் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டின. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக பில்லர்ராக், மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் களை கட்டின. மேலும் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அறைகள் கிடைக் காததன் காரணமாக பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

தொடர் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை முடியும் வரை கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Next Story