கரூரில் 320 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தி வைத்தார்


கரூரில் 320 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தி வைத்தார்
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 8:13 PM GMT)

கரூரில் 320 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவினை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தி வைத்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் கரூர் மற்றும் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஏழை-எளிய 320 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி வளைகாப்பினை நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். அதில் பெண் சிசுக்கொலைகளை தடுக்கும் விதமாக தொட்டில்குழந்தை திட்டம், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதிஉதவி திட்டம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள், மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் என்பன உள்ளிட்டவை அதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

சரிவிகித ஊட்டச்சத்து

அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய பெண்களுக்கு அவர்களது கர்ப்ப காலத்தில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தி சீர்வரிசை வழங்குவதும் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் கர்ப்ப காலத்தில் சரிவிகித ஊட்டச்சத்து உணவினை உட்கொள்ள வேண்டும். மேலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், இனிமையான இசைகளை கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது போன்றவைகளை செய்வதன் வாயிலாக நம் மனம் அமைதிபடுவதன் மூலம் அதன் விளைவு குழந்தைக்கும் கிடைக்கும். அதன்மூலம் ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான, ஆரோக்கியமான ஒரு குழந்தையை பெற்றெடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில், கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்நிரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி கீதா, திருச்சி மத்திய கூட்டுறவுவங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பபன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் தானே‌‌ஷ் என்கிற முத்துக்குமார், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ்(கரூர்), மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்க்கண்டேயன் மற்றும் கரூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி சபிதா (கரூர்), சஹீமா பாத்திமா பேகம் (தான்தோன்றிமலை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story