திருவெறும்பூர் அருகே சிமெண்டு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


திருவெறும்பூர் அருகே சிமெண்டு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 10:15 PM GMT (Updated: 2 Oct 2019 8:16 PM GMT)

திருவெறும்பூர் அருகே சிமெண்டு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொன்மலைப்பட்டி,

திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மண் சாலைகளை ரூ.50 லட்சம் செலவில் சிமெண்டு ஹாலோபிளாக் கற்களை கொண்டு சாலை அமைப்பதற்கு கடந்த 2016-17-ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் கூத்தைப்பார் மந்தை மற்றும் 3-வது வார்டு மாரியம்மன் கோவில் பகுதியில் சிமெண்டு ஹாலோ பிளாக் கற்கள் மூலம் சாலை அமைக்கப்பட்டது.

இதில் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி மட்டுமே செலவானதாகவும், மீதமுள்ள நிதிக்கு உரிய சிமெண்டு ஹலோபிளாக் சாலை அமைக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கூத்தைப்பார் பேரூராட்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் சுரேஷிடம், மீதமுள்ள பணியை செய்து முடிக்கும் படி அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பேரூராட்சியின் முதலாவது வார்டுக்கு உட்பட்ட சாமியார் தெருவில் சிமெண்டு ஹாலோ பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. குடியிருப்பு பட்டா பகுதியில் சாலை அமைத்ததை வரவேற்ற அப்பகுதி மக்கள், புறம்போக்கு பகுதியில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கூத்தைப்பார் பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், சாமியார் தெருவில் ஹாலோ பிளாக் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த பணியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலை புறம்போக்கு மற்றும் புறம்போக்கு நிலங்களை அளந்து பார்த்து, நிலம் கையகப்படுத்தப்படும், என்று கூறினார்.


Next Story