திண்டுக்கல், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி - நண்பர் படுகாயம்


திண்டுக்கல், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி - நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Oct 2019 9:45 PM GMT (Updated: 3 Oct 2019 2:57 PM GMT)

திண்டுக்கல், சத்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியானார். மேலும் உடன் சென்ற நண்பரும் படுகாயமடைந்தார்.

சத்திரப்பட்டி, 

சத்திரப்பட்டி அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). டிராக்டர் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான ஈஸ்வரன் (30) என்பவருடன் வேலூரில் இருந்து சத்திரப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் மீண்டும் வேலூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஈஸ்வரன் ஓட்டினார்.

சத்திரப்பட்டி தேவாலய தெரு பகுதியில் வந்தபோது, சாலையில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது, அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி அருகேயுள்ள வீட்டுச்சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். ஈஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story