உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால் 1,323 பதவிகளுக்கு நேரடி தேர்தல் கலெக்டர் சாந்தா தகவல்


உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால் 1,323 பதவிகளுக்கு நேரடி தேர்தல் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2019 11:00 PM GMT (Updated: 5 Oct 2019 7:53 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,323 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள், 121 ஊராட்சிகளில் உள்ள 1,032 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 8 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவியிடங்கள், 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 76 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிடங்கள் என ஊரக பகுதிகளில் மொத்தம் 1,237 பதவியிடங்கள் காலியாக உள்ளன.

நகர்புற பகுதிகளில் பெரம்பலூர் நகராட்சியில் 1 தலைவர் பதவியும், 21 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 4 பேரூராட்சி தலைவர்கள் பதவியிடங்களும், 4 பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர்கள் என 60 வார்டு உறுப்பினர்கள் என்று நகர்ப்புறங்களில் 86 பதவியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி ஊரக பகுதிகளை சேர்ந்த 1,237 பதவியிடங்கள், நகர்புறங்களை சேர்ந்த 86 பதவியிடங்கள் என மொத்தம் 1,323 பதவியிடங்களுக்குதேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நேரடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் என 2 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் என 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 8 பதவியிடங்கள், 121 ஊராட்சிகளின் 121 துணைத்தலைவர் பதவியிடங்கள் என ஊரக பகுதிகளில் 131 பதவியிடங்களுக்கும், நகர்ப்புற பகுதிகளில் 4 பேரூராட்சிகளின் 4 துணைத் தலைவர் பதவியிடங்கள், 1 நகராட்சி துணைத் தலைவர் பதவியிடம் என 5 பதவியிடங்களுக்கும் என மொத்தம் ஊரக, நகர்ப்புற பகுதிகளில் உள்ள 136 பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,323 பதவியிடங்களுக்கு நேர்முகமாகவும், 136 பதவியிடங்களுக்கு மறைமுகமாகவும் என மொத்தம் 1,459 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story