சிங்கம்புணரி அருகே கொலை செய்யப்பட்ட வக்கீல் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


சிங்கம்புணரி அருகே கொலை செய்யப்பட்ட வக்கீல் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2019 11:30 PM GMT (Updated: 5 Oct 2019 8:46 PM GMT)

கொலை செய்யப்பட்ட அ.ம.மு.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கம்புணரி,

மதுரை கொட்டாம்பட்டி சொக்கலிங்கபுரம் அருகே உதினிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா என்கிற காதர்ஷா(வயது38). இவர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராவார். தற்போது அ.ம.மு.க.வில், மதுரை வடக்கு மாவட்ட சிறுபான்மைபிரிவு செயலாளராக இருந்து வந்தார். மேலும் வக்கீலாக பணிபுரிந்த இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்பீல்டு காலனியில் வசித்து வந்தார்.

சமீபத்தில் சொந்த ஊரான உதினிப்பட்டியிலும் வீடு கட்டி அங்கு சில நாட்கள் என இரு ஊர்களிலும் வசித்தார். இந்த நிலையில் உதினிப்பட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தமது தண்ணீர் சுத்திகரிப்பு கம்பெனிக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் கடந்த 4-ந் தேதி மாலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். வீடு திரும்பாத அவர் இரவு 8 மணியளவில் சிங்கம்புணரி அருகே அய்யனார் கோவில் பகுதியில் கழுத்தில் ஆழமான கத்திக்குத்து காயத்தோடு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் அருகில் கிடந்தது.

தகவலறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை வாகனம் மூலமாக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து போனதை உறுதி செய்தனர். அதையடுத்து அவர் உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

கொலை வழக்கு பதிவு செய்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அவரது மனைவி அன்வர்பானு(35) கொட்டாம்பட்டி போலீசில் ஒரு மனு கொடுத்தார். அதில் தொழில் போட்டி, முன்விரோதத்தில் தனது கணவரை உறவினர்கள் 6 பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என கூறியிருந்தார்.

காதர்ஷா கொலை செய்யப்பட்டதை அறிந்து அவரது உறவினர்கள்இரவு முதலே மருத்துவமனையில் திரண்டனர். நேற்று அவரது

உடல் பரிசோதனை நடந்து கொண்டிருந்த போது அவரது மாமனார் சிங்கம்புணரி முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் முத்து முகமது, தனது மருமகன் சாவிற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என உறவினர்களுடன் திரண்டு மருத்துவமனையில் தர்ணா செய்தார்.

அவர்களுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதால் 2 நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதை அடுத்து உடலை பெற்றுச் சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story