வீட்டிலேயே குப்பைகளை உரமாக்கும் திட்டம்: மாணவர்களுக்கு சைக்கிள் பரிசு


வீட்டிலேயே குப்பைகளை உரமாக்கும் திட்டம்: மாணவர்களுக்கு சைக்கிள் பரிசு
x
தினத்தந்தி 5 Oct 2019 10:45 PM GMT (Updated: 5 Oct 2019 9:01 PM GMT)

திருச்சி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு, குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை வீட்டில் செயல்படுத்திய மாணவர்களுக்கு சைக்கிளை பரிசாக அதிகாரிகள் வழங்கினர்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் நோக்கில் தங்கள் வீடுகளில் சரியான முறையில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தும் பள்ளி மாணவர்களில் வாரந்தோறும் தலா 5 மாணவர்கள் தேர்வு செய்தும் மற்றும் தினசரி வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் அமைப்பை ஏற்படுத்தும் பள்ளி மாணவர்களில் வாரந்தோறும் தலா 5 மாணவர்களை தேர்வு செய்தும் ஆக மொத்தம் 10 மாணவர்களுக்கு வாரந்தோறும் தலா ரூ.5,500 மதிப்புள்ள சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

இதற்கு மாணவர்கள் தங்களது இல்லத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வீட்டிலேயே உரம் தயாரிக்கும் விவரத்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைக்குள் மாநகராட்சி வாட்ஸ் அப் எண் 8300113000-ல் பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

பரிசு

அந்த வகையில் புகைப்படத்துடன் பதிவு செய்தவர்களை உதவி ஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வீடுகளில் நேரடியாக பார்வையிட்டு சரியான முறையில் அமைக்கப்பட்டவர்களை தேர்வுசெய்தனர். சரியான முறையில் மழை நீர் சேகரிப்பு அமைத்த மாணவர்கள் ஹரி‌‌ஷசாந்த், அர்ஜூனா, நிகான், மாணவி யாமினி, மற்றும் தங்கள் இல்லங்களில் உருவாகும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் திட்டத்தினை செயல்படுத்திய மாணவர்கள் சபரி‌‌ஷ், இறைஅருள், முரளிகிரு‌‌ஷ்ணா, சுவேந்தன்ராஜ், மாணவி திவ்யா ஆகியோருக்கு தலா ரூ.5,500 மதிப்புள்ள சைக்கிளை பரிசாக செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர் திருஞானம் ஆகியோர் வழங்கினர்.


Next Story