மனைவியை அடித்துக்கொன்ற முதியவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை குடும்ப தகராறில் விபரீதம்


மனைவியை அடித்துக்கொன்ற முதியவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை குடும்ப தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:30 PM GMT (Updated: 6 Oct 2019 5:41 PM GMT)

கும்பகோணம் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற முதியவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது72). இவருடைய மனைவி கருப்பாயி (65). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுடைய மகள் அமுதா. இவர் திருமணமாகி கணவருடன் மதுரையில் வசித்து வருகிறார். வளர்ப்பு மகன் கார்த்தி மதுரை அருகே உள்ள சோழவந்தானில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை முனியாண்டி கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கும்பகோணம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் இறந்தது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றனர்.

அங்கு முனியாண்டியின் மனைவி கருப்பாயி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார் இதுபற்றி உடனடியாக கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த முனியாண்டி தனது மனைவி கருப்பாயியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தெரியவந்தது.

இந்தநிலையில் தனது பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டதை அறிந்த அமுதா அவர்களை சமாதானம் செய்ய மதுரையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது தனது தாய் கொலை செய்யப்பட்டதையும் தந்தை தற்கொலை செய்து கொண்டதையும் அறிந்த அவர் கதறி அழுதார். இது குறித்து அமுதா கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக கருப்பாயி உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story