தேனி அருகே, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த புதுமாப்பிள்ளை குத்திக்கொலை - தந்தை கைது


தேனி அருகே, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த புதுமாப்பிள்ளை குத்திக்கொலை - தந்தை கைது
x
தினத்தந்தி 8 Oct 2019 11:15 PM GMT (Updated: 8 Oct 2019 9:56 PM GMT)

தேனி அருகே மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதையொட்டி அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி, 

தேனி அருகே உள்ள பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 59). இவர் அதே ஊரில் கோழி இறைச்சி விற்பனை கடை வைத்துள்ளார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு.

தங்கராஜின் மூத்த மகன் மலைச்சாமி (29). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு டயர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த ஜோதி (19) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. மலைச்சாமிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.

திருமணமான சில நாட்களில் இருந்தே அவர் தனது பெற்றோரிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். மதுபோதையிலும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், அவரது மனைவி ஜோதி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் தங்கராஜும், அவருடைய இளைய மகன் காமுத்துரையும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மலைச்சாமி மதுகுடிக்க பணம் கேட்டு தனது தந்தையிடம் தகராறு செய்தார். இதனால், ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் என்றும் பாராமல் சரமாரியாக மலைச்சாமியை குத்தினார். இதில் அவருடைய கழுத்து, கை, இடுப்பு, காது உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜே‌‌ஷ்கண்ணா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் கைப்பற்றினர்.

இந்த கொலை குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஜோதி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜை கைது செய்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் ஆத்திரத்தில் தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story