காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 5:21 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதையடுத்து கர்நாடகத்தில் உள்ள கிரு‌‌ஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்த உபரிநீர் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதனால் இந்த ஆண்டில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை (93.45 டி.எம்.சி.) எட்டி 2 முறை நிரம்பியது. இதன்பின்னரும் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் கர்நாடகத்தில் மழைப்பொழிவு மிகவும் குறைந்தது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த 3-ந்தேதி அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 269 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவை விட அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

இந்தநிலையில் தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கடந்த 7-ந்தேதி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 31 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மழையின் காரணமாக நேற்று நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரத்து 169 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட அதிகமாக உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. கடந்த 8-ந்தேதி 116.90 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 116.97 அடியாக உயர்ந்துள்ளது.

Next Story