தகுதி பெறாத, முறையாக பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்


தகுதி பெறாத, முறையாக பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 PM GMT (Updated: 9 Oct 2019 7:31 PM GMT)

தகுதி பெறாத, முறையாக பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

புதுக்கோட்டை,

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நேரத்தில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் உண்டாகும் தொற்றுநோய்கள் மற்றும் கொசுத்தொல்லை போன்றவற்றை எதிர்கொள்வதற்காகவும் சிறப்பு பயிற்சி அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் நோயாளிகள் முறையான சிகிச்சை பெறவும், தகுதி பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். மருந்துக்கடை, தனியார் மருந்துக்கடை நடத்துபவர்கள், மருந்துக்கடை பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தினை நேரடியாக வழங்க கூடாது என அறிவுறுத்திடும் வகையில் அவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற உள்ளது.

போலி மருத்துவர்கள்

காய்ச்சல் நோய்க்கான தனி வெளிநோயாளி பகுதி மற்றும் உள் நோயாளி பிரிவுகள் ஏற்பாடு அனைத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு உள்ளது. காய்ச்சல் நோயை எதிர்கொள்வதற்கான அடிப்படை வசதிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ளது.

குறிப்பாக இத்தகைய சூழ்நிலையில் முறையற்ற சிகிச்சையாலும், தேவையற்ற மருந்துகள் பயன்படுத்துவதாலும் ஏற்படும் மரணங்களை தடுப்பதற்கு மருத்துவத்துறையினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே பொதுமக்கள் தகுதி பெறாத, முறையாக பட்டம் பெறாத போலி மருத்துவர்களைக் கண்டறிந்தால் அவர்கள் குறித்து உடனடியாக 04322 - 221775 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story