காதலுக்கு எதிர்ப்பு: என்ஜினீயரிங் மாணவி, காதலனுடன் காருக்குள் சயனைடு தின்று தற்கொலை


காதலுக்கு எதிர்ப்பு: என்ஜினீயரிங் மாணவி, காதலனுடன் காருக்குள் சயனைடு தின்று தற்கொலை
x
தினத்தந்தி 9 Oct 2019 11:15 PM GMT (Updated: 9 Oct 2019 8:06 PM GMT)

சேலம் செவ்வாய்பேட்டையில் என்ஜினீயரிங் மாணவி, காதலனுடன் காருக்குள் பிணமாக கிடந்தார். அவர்கள் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் (வயது 22). இவர் தந்தையுடன் சேர்ந்து வெள்ளி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மேலும் அவருடைய செல்போன் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

கோபியின் கார் நிறுத்தும் இடம் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. அங்கு சென்று பார்த்த போது காருக்குள் சுரேஷ் பிணமாக கிடந்தார். சுரேஷ் உடல் அருகே இளம்பெண் ஒருவரும் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் சுரேசுடன் இறந்து கிடந்த பெண், குகை மாரியம்மன் கோவிலை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவியான ஜோதிகா(20) என்று தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சுரேசும், சேலம் அருகே ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த ஜோதிகாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சுரேஷ் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் ஜோதிகாவின் தந்தை வெள்ளி தொழில் மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறார். இதனால் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருந்தாலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் அவர்கள் இருவரும் சந்தித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் ஜோதிகாவை வெளியில் செல்ல பெற்றோர் தடை விதித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேசும், ஜோதிகாவும் கார் நிறுத்தும் இடத்தில் சந்தித்து நீண்ட நேரமாக பேசி உள்ளனர். அப்போது காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிப்பதால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்வது என்று முடிவு செய்திருக்கலாம்.

இதையடுத்து 2 பேரும் வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர்கள் எப்படி தற்கொலை செய்து கொண்டார்கள்? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story