குலசேகரம் அருகே போலீசாரை மிரட்டிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது


குலசேகரம் அருகே போலீசாரை மிரட்டிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2019 10:15 PM GMT (Updated: 9 Oct 2019 8:28 PM GMT)

குலசேகரம் அருகே போலீசாரை மிரட்டிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குலசேகரம்,

குலசேகரம் நாகக்கோடு சந்திப்பில் வாடகை கார் ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா நடந்தது. விழாவில் ஏழை மக்களுக்கு இலவச தையல் எந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இந்த நேரத்தில் நிகழ்ச்சியை காண வந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் போலீசாரின் அறிவுரையை கேட்காமல் தகராறில் ஈடுபட்டனர். மேலும் குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கும் வாக்கு வாதம் நடைபெற்றது.

கைது

அப்போது போலீசார் ஒரு வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இதை கண்டதும் அவரதுநண்பர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை மிரட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து போலீசாரை மிரட்டியதாக குலசேகரம் பகுதியை சேர்ந்த லெனின்(வயது 27), அரமன்னம் பகுதியை சேர்ந்த கோபி(53), அண்ணா நகரை சேர்ந்த விபின் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லெனின் ராணுவ வீரர் ஆவாா். மேலும் வாடகை கார் ஓட்டுனர் சங்க தலைவரான சூரியக்கோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story