அன்னூரில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - உடல் குளத்தில் வீச்சு


அன்னூரில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - உடல் குளத்தில் வீச்சு
x
தினத்தந்தி 9 Oct 2019 11:15 PM GMT (Updated: 9 Oct 2019 8:30 PM GMT)

அன்னூரில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம ஆசாமிகள் அவருடைய உடலை குளத்தில் வீசி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சரவணம்பட்டி,

கோவையை அடுத்த அன்னூரில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை எதிரே பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. குளத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க, ஆண் பிணம் கிடப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு அன்னூர் மணிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 29) என்பதும், இவர் அன்னூர் பகுதியில் ஆட்டோ மற்றும் மினி பஸ்களில் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவரின் தலை மற்றும் மார்பு பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டிருந்தது. இதனால் மர்ம ஆசாமிகள் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து குளத்தில் வீசி சென்றது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் அன்னூர் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். இதைத்தொடர்ந்து அஜித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அஜித்குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அவரின் செல்போன் எண்ணுக்கு கடைசியாக வந்த அழைப்புகள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அஜித்குமாருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரியா (25) என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார். பிரியாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஆண்குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன் சரவணம்பட்டியில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அன்னூரில் மேலும் ஒரு ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story