பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 33 பேர் காயம்


பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 33 பேர் காயம்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 7:18 PM GMT)

அயோத்தியாப்பட்டணம் அருகே பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து சேலத்தை நோக்கி நேற்று அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அயோத்தியாப்பட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு, புறப்பட்டது. அதே நேரத்தில் அந்த வழியாக நங்கவள்ளியில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு சின்னகவுண்டாபுரம் நோக்கி ஒரு தனியார் கல்லூரி பஸ் வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக காலை 9.30 மணிக்கு அரசு டவுன் பஸ்சும், தனியார் கல்லூரி பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள், கல்லூரி பஸ்சில் வந்த மாணவ-மாணவிகள் என 33 பேர் காயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு சூர்யமூர்த்தி, காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நிவிதா, தாரணி, ராதிகா, ரே‌‌ஷ்மா, பானு, பெரியசாமி, சிவக்குமார், லிங்கேஸ்வரன், கார்த்திக் உள்பட 17 பேர் மின்னாம்பள்ளியில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு பஸ்சில் வந்த பயணிகளில் 8 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், 8 பேர் சேலத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டிரைவர்களிடம் விசாரணை

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அரசு டவுன் பஸ் டிரைவர் செந்தில்ராஜா (வயது 35), தனியார் கல்லூரி பஸ் டிரைவர் கணேசன் (32) ஆகியோரிடம் காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story