திண்டுக்கல்லில், ரெயில் மறியல் போராட்டம்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 21 பேர் கைது


திண்டுக்கல்லில், ரெயில் மறியல் போராட்டம்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 21 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 8:47 PM GMT)

திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் பாலகிரு‌‌ஷ்ணாபுரத்தில் அடுத்தடுத்து 3 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. சுமார் 30 நிமிட இடைவெளியில் ஏதாவது ஒரு ரெயில்வே கேட் மூடப்படும். இதனால் பாலகிரு‌‌ஷ்ணாபுரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் பாலகிரு‌‌ஷ்ணாபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதில் மேம்பாலம் மட்டுமின்றி 3 ரெயில் தண்டவாளத்திலும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தியதில் இன்னும் சிலருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனால் மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதிலும் முதலாவது ரெயில்வே கேட் மூடப்பட்டு விட்டது. இதன் காரணமாக மக்கள் சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றி நகருக்குள் வரவேண்டியது உள்ளது.

எனவே, பணிகளை துரிதப்படுத்தி மேம்பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். சுரங்கப்பாதைகளை மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தை அறிவித்தனர். இதையொட்டி பாலகிரு‌‌ஷ்ணாபுரத்தில் நேற்று காலையிலேயே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் அஜாய்கோ‌‌ஷ் தலைமையில் சிலர், 3-வது ரெயில்வே கேட் நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் சிலர் தண்டவாளம் வழியே நடந்து வந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் 3-வது ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர். இதனால் நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உ‌ஷா தலைமையிலான அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 30 நிமிடம் தாமதமாக திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story