பனப்பாக்கத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி - மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு


பனப்பாக்கத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி - மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Oct 2019 10:15 PM GMT (Updated: 10 Oct 2019 8:49 PM GMT)

பனப்பாக்கத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பனப்பாக்கம்,

பனப்பாக்கம் அம்மநாயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 64), ஒப்பந்ததாரர். இவர் நேற்று முன்தினம் நெமிலியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்தார்.

பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு பனப்பாக்கத்துக்கு பஸ்சில் சென்றார். பனப்பாக்கத்தில் பஸ்சை விட்டு இறங்கி, அங்கு நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

பணம் இருந்த பையை சைக்கிளின் முன்பகுதியில் உள்ள கூடையில் வைத்திருந்தார். அப்போது அவரை 2 நபர்கள் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்களில் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் பிரகாசத்திடம் பேச்சு கொடுத்துள்ளான்.

இந்த நேரத்தில் மோட்டார்சைக்கிளில் பின்னால் இருந்தவன், பிரகாசம் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணப்பையை எடுத்துக்கொண்டான். உடனே கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து நெமிலி போலீஸ்நிலையத்தில் பிரகாசம் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை பறித்துச்சென்ற 2 மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story