நீர் ஆதாரம் இருந்தாலும் கிராமங்களில் மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


நீர் ஆதாரம் இருந்தாலும் கிராமங்களில் மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2019 10:15 PM GMT (Updated: 11 Oct 2019 1:44 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் நீர் ஆதாரம் இருந்தாலும் வேறு பல காரணங்களால் கிராம மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான காரணத்தை கண்டறிந்து சீரான குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களில் 1800 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீர் ஆதாரங்களே பிரதானமாக இருந்து வரும் நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் கைகொடுத்து வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு தினசரி 720 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தினசரி 760 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஆனாலும் பொரும்பாலான கிராமங்களில் கிராம மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 64 கிராமங்களில் மட்டுமே குடிநீர் பிரச்சினை உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள போதிலும், அனேக கிராமங்களில் பல்வேறு காரணங்களால் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பஞ்சாயத்து செயலர்கள் நிர்வாகத்தில் கிராமபஞ்சாயத்துகள் இருந்து வரும் நிலையில் குடிநீர் பிரச்சினை குறித்து கிராமக்கள் முறையிட்டாலும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் தெரிவிக்கும் கிராம மக்கள் தங்கள் பகுதியில் நிர்வாக காரணத்தாலே குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் நிலை உள்ளது.

கிராமப்பகுதிகளில் குடிநீருக்கான நீர் ஆதாரம் இருந்த போதிலும் மின் மோட்டார் பழுது, பகிர்மான குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளாலும் குடிநீர் விநியோகம் முடங்கி உள்ளது. கிராமப்பஞ்சாயத்துக்களில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க தேவையான நிதி ஆதாரம் இல்லை எனவும் புகார் கூறப்படுகிறது. இதனால் குடிநீருக்கு தவிக்கும் கிராமமக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் யூனியன் அதிகாரிகள் மூலம் கிராமங்களில் குடிநீர் பிரச்சினைக்கான காரணங்களை கண்டறிந்து பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை உள்ள பஞ்சாயத்துக்களில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டியது அவசியம் ஆகும். உடனடி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

Next Story