வன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்? சீமான் கேள்வி


வன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்? சீமான் கேள்வி
x
தினத்தந்தி 11 Oct 2019 11:45 PM GMT (Updated: 11 Oct 2019 7:40 PM GMT)

வன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்? வந்துள்ளது என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து நேற்று மாலை விக்கிரவாண்டி, பனையபுரம், ராதாபுரம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு அனைத்து பரிவர்த்தனைகளையும் செல்போனில் கொண்டு வந்து விட்டது. பால் விற்கும் பாட்டிக்கு பால் பணத்தை செல்போனில் மாற்றினால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்ய முடியும்?

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட்டவுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கிறார். இதை ஏன் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது அறிவிக்கவில்லை. வன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன்? அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இந்த அறிவிப்பா? ஆட்சிக்கு வந்தால் செய்கிறேன் என்கிறீர்களே, இந்த அறிவிப்பை நான் கூறினால் தவறில்லை. ஆனால் ஆட்சியில் ஏற்கனவே இருந்த உங்களுக்கு உள் ஒதுக்கீடு தேவை என்பது தெரியாதா? விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் மாறுதல் வந்து விடப்போகிறதா?

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புக்காக மலேசியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பு படிக்கிறார்கள். ஆனால் எங்கிருந்தோ வந்தவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து பின்னர் மருத்துவ படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்க வருகின்றனர். அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் இடம் என சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஆளும்கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் மாறி, மாறி தேர்தலில் நின்று என்றைக்கு சோர்வடைகிறார்களோ அன்று நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. அன்று ஒரு வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்யுங்கள். உங்களுக்காக உழைப்போம். விக்கிரவாண்டி தேர்தல் ஒரு மாற்று அரசியலுக்கான தொடக்கமாக இருக்கட்டும். இதை உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story