தேனி அரசு பள்ளியில் விளையாட்டு சண்டை விபரீதமாகி பிளஸ்-2 மாணவர் பரிதாப சாவு


தேனி அரசு பள்ளியில் விளையாட்டு சண்டை விபரீதமாகி பிளஸ்-2 மாணவர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 11 Oct 2019 11:30 PM GMT (Updated: 11 Oct 2019 7:49 PM GMT)

தேனியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட விளையாட்டு சண்டை விபரீதமாகி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார். உறவினர்கள் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி,

தேனி அல்லிநகரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் திருமால் (வயது 17). இவர், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று பிற்பகல் இவர் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிடச் சென்றார். சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டார். பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தபோது, அவருடைய இடுப்பை சக மாணவர் ஒருவர் கிள்ளி விளையாடினார். பின்னர் திருமால் வகுப்பறைக்குள் சென்று விட்டார்.

அவரை பின்தொடர்ந்து அந்த மாணவரும் வகுப்பறைக்கு சென்றார். வகுப்பறைக்குள் மீண்டும் அந்த மாணவர், திருமாலின் இடுப்பை கிள்ளி விளையாட்டாக சண்டையிட்டதாக தெரிகிறது. அப்போது திருமாலை அந்த மாணவர் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் கூச்சல் போட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தனர். மாணவர் மயங்கிக் கிடப்பது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அதில் மாணவர் திருமாலை ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த தகவல் அறிந்ததும் இறந்த மாணவரின் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மறியல் செய்தவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேரம் மறியல் நீடித்ததால், மறியலில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்வதாக கூறி போலீஸ் வேனில் ஏற்றினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே மாணவர் சாவுக்கு காரணமான 17 வயதுடைய பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பள்ளியில் உள்ள சக மாணவ, மாணவிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இறந்த மாணவரும், அவருடைய சாவுக்கு காரணமான மாணவரும் ஒரே வகுப்பறையில் படிப்பவர்கள். இருவரும் 8-ம் வகுப்பில் இருந்தே நண்பர்களாக ஒன்றாக படித்து வருகிறார்கள். இடுப்பை கிள்ளி விளையாடிய நிலையில், விளையாட்டாய் தொடங்கிய சண்டை எதிர்பாராத விதமாக விபரீதமாகி விட்டது’ என்றார். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story