சேலத்தில், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 2 கர்ப்பிணிகள் அடுத்தடுத்து சாவு


சேலத்தில், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 2 கர்ப்பிணிகள் அடுத்தடுத்து சாவு
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 2 கர்ப்பிணிகள் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

சேலம், 

சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா(வயது 20). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமான கிருத்திகா கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்து வந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு ரத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ரத்தம் ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் அதே ஆஸ்பத்திரிக்கு கிரித்திகாவை உறவினர்கள் அழைத்து சென்றனர். அப்போது அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் அவருடைய உடல்நிலையில் பாதிப்பு உள்ளதால் ரத்தம் ஏற்ற முடியாது என்றும், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறும் டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து உறவினர்கள் கிருத்திகாவை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிபிரசாத். இவருடைய மனைவி கவுசிகா(24). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கவுசிகா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட அவருக்கு திடீரென வயிற்றுவலி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உடனடியாக உறவினர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு நேற்று காலையும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருடைய உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கவுசிகாவை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, கவுசிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 2 கர்ப்பிணிகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உயிரிழந்த கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story