சிவா எம்.எல்.ஏ. தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை


சிவா எம்.எல்.ஏ. தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 12 Oct 2019 12:00 AM GMT (Updated: 12 Oct 2019 12:00 AM GMT)

முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தை சிவா எம்.எல்.ஏ. தலைமையில் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

புதுவை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 32). அ.தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது நண்பர் ஒருவருடன் சாப்பிட சென்றார். அப்போது ஓட்டல் உரிமையாளர் மனோகரிடம், தணிகாசலத்தின் நண்பர் தகராறு செய்துள்ளார். உடனே மனோகர் தனது நண்பர்கள் சிலரை போன் மூலமாக அழைத்தார். அதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தணிகாசலம் அளித்த புகாரின்பேரில் ஓட்டல் உரிமையாளர் மனோகர் மற்றும் வேலு, கணபதி, ரவி, வக்கீல் சம்பத் ஆகிய 5 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர் மனோகரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் புதுவை - கடலூர் சாலையில் உள்ள முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா தனது ஆதரவாளர்களுடன் நேற்று முற்றுகையிட்டார். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சிவா எம்.எல்.ஏ. கூறுகையில், ‘போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவது தவறு. பிரச்சினையை உருவாக்கிய தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்’. அதற்கு போலீசார் தரப்பில் மற்றொரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story