ராமநாதபுரம் அருகே செயற்கை கருவூட்டல் முறையில் 2 கன்றுகளை ஈன்ற பசு


ராமநாதபுரம் அருகே செயற்கை கருவூட்டல் முறையில் 2 கன்றுகளை ஈன்ற பசு
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 3:30 PM GMT)

ராமநாதபுரம் அருகே செயற்கை கருவூட்டல் முறையில் பசு மாடு 2 கன்றுகளை ஈன்றுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சிகில் ராஜவீதி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 33). கப்பலில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ராஜராஜேசுவரி. எம்.இ. பட்டதாரியான இவருக்கு தினேஷ்குமார் மேலக்கோட்டை ரமலான் நகரில் பசுமை பால்பண்ணை வைத்து கொடுத்துள்ளார். ராஜ ராஜேசுவரியின் பராமரிப்பில் இந்த பண்ணையில் 14 மாடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளின் சாணம், சிறுநீர் உள்ளிட்டவைகளை கொண்டு இயற்கை உரம் முறையில் சுமார் ஒரு ஏக்கரில் புல் பண்ணை அமைத்து கோ-4 புல் உற்பத்தி செய்து பசுமாடுகளுக்கு தீவனம் கொடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜராஜேசுவரி வளர்த்து வரும் பசுமாடு செயற்கை கருவூட்டல் முறையில் சினை பிடித்து 2 கன்றுகளை ஈன்றுள்ளது. இவை இரண்டுமே காளை கன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை கருவூட்டல் முறையில் பொதுவாக பசுக்கள் ஒரு கன்றுதான் போடுவது வழக்கம். அதிகபட்சமாக 2 கன்றுகள் பிறந்தாலும் ஒன்று பசு மற்றொன்று காளை என்று வேறுவேறு குட்டிகளாகத்தான் இருக்கும். ஆயிரத்தில் ஒரு மாட்டிற்கு இதுபோன்று 2 குட்டிகளுமே காளை கன்றுகளாக பிறப்பது அதிசயமாகும். இந்த நிலையில் தாங்கள் வளர்க்கும் பசுமாடு செயற்கை முறையில் 2 காளை கன்றுகளை போட்டுள்ளதை கண்டு ராஜராஜேசுவரி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செயற்கை முறையில் சினை ஊசி போட்டு மாடுகளை முறையாக பராமரித்து புல் உள்ளிட்ட இயற்கை உணவு கொடுத்து பாதுகாத்து வந்ததால் இந்த இரட்டை மகிழ்ச்சி கிடைத்துள்ளதாக ராஜராஜேசுவரி தெரிவித்தார். எம்.இ. படித்துவிட்டு சென்னையில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் அந்த பணியை விட்டுவிட்டு கணவரின் ஊக்கத்தால் பசுமாடுகளை சுயதொழிலாக வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story