மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க மக்கள் எழுச்சியை தமிழக அரசு உருவாக்க வேண்டும்


மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க மக்கள் எழுச்சியை தமிழக அரசு உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 4:43 PM GMT)

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க மக்கள் எழுச்சியை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் மணிமொழியன், ஜெகதீசன், டாக்டர் பாரதிசெல்வன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகி பழ.ராஜேந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாது அணை

காவிரி தீர்ப்பாயத்தின் இடைக்கால தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்ததை போலவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் கர்நாடக அரசு செயல்படுத்த மறுக்கிறது. கர்நாடக அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீர் இப்போது நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து விடுகிறது. இதை தடுத்து முழுமையாக கர்நாடகம் புதிய பாசனத்திற்கும், குடிநீர், தொழிற்சாலை தேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்ளும் திட்டம் தான் மேகதாதுவில் அணை கட்டும் திட்டம்.

ஒரு சொட்டு தண்ணீர் வராது

ஏற்கனவே கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 114 டி.எம்.சி. ஆகும். இவற்றில் இருந்து வெளியேறும் மிச்ச தண்ணீரையும் தேக்கும் மேகதாது அணையின் கொள்ளளவு 67.16 டி.எம்.சி. ஆகும்.

தமிழகத்திற்குரிய தண்ணீரை தட்டுப்பாடு இன்றி மாதம்தோறும் திறந்து விடுவதற்கு தான் மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என கர்நாடகம் கூறுவது 100 சதவீதம் பொய். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் எப்படிப்பட்ட பெரிய வெள்ளமானாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வராது.

மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்

கர்நாடகம் புதிய அணை கட்டுவதை தடுக்க வெளிப் படையாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக மக்கள் முழக்கமாக மாற்றிட குமரி முனையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரையுள்ள மக்கள், காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சி மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் கூட்டு கூட்டத்தை தமிழக அரசு நடத்தி மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்

பரப்புரை

மேகதாதுவை தடுப்போம்... காவிரியை காப்போம்... என்ற தலைப்பில் அடுத்த மாதம்(நவம்பர்) 11-ந் தேதி பூம்புகாரில் பரப்புரையை தொடங்குகிறோம். ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து காவிரியை காக்க வேண்டும்.

கர்நாடக அரசு புதிய அணை கட்ட மத்திய அரசு மறைமுகமாக அனுமதிக்கிறது என உண்மை நிலவரத்தை பரப்புரையின்போது எடுத்து கூற இருக்கிறோம். இந்த பரப்புரை அடுத்த மாதம் 20-ந் தேதி மேட்டூரில் நிறைவடைகிறது.

வட்டியில்லா கடன்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதால் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. சில இடங்களில் நெல் முளைத்து வீணாகி கொண்டு இருக்கிறது. 21 சதவீத ஈரப்பதம் வரை கொள்முதல் செய்த காலம் உண்டு. அதேபோல் 21 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் வட்டியில்லா கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு தொகை அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story