16 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்


16 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:15 PM GMT (Updated: 12 Oct 2019 7:56 PM GMT)

விராலிமலை அருகே 16 வயது சிறுமியை 2-வதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கோமங்களம் ஊராட்சி, பெருமாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 52). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். விவசாயியான பெரியண்ணன் கோமங்களம் ஊராட்சியில் 2 முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பெரியண்ணனின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் 2-வது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த பெரியண்ணன், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்ய முடிவு செய்து, அந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐப்பசி முதல் வாரத்தில் பெரியண்ணனுக்கும், அந்த சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து தகவல் தெரிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் இதுபற்றி புதுக்கோட்டை சைல்டுலைன் அமைப்பு மற்றும் சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தலைமறைவு

இந்த தகவல் பெரியண்ணனுக்கு தெரியவந்ததால், சிறுமியையும், அவரது தாயாரையும் விராலிமலை அருகே உள்ள தென்னம்பாடி என்ற கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். இதற்கிடையில் சைல்டுலைன் அமைப்பை சேர்ந்த விராலிமலை வட்டார அலுவலர் ஜாக்குலின், வட்டார சமூகநல அலுவலர் லலிதா ஆகியோர் பெருமாம்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் தென்னம்பாடி, கிராமத்திற்கு சென்று சிறுமியையும், அவரது தாயாரையும் மீட்டு வந்தனர். இதற்கிடையில் தலை மறைவான பெரியண்ணனை விராலிமலை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து சைல்டுலைன் அலுவலர்கள் சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். பின்னர் நாளை (திங்கட்கிழமை) புதுக்கோட்டையில் உள்ள சைல்டுலைன் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறுமியும், அவரது பெற்றோரும் ஆஜராக வேண்டும் எனக்கூறிவிட்டு சென்றனர். விராலிமலை அருகே 16 வயது சிறுமியை 2-வதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story