டிராக்டர் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார் உறவினர்கள் மறியல்


டிராக்டர் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார் உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:17 PM GMT (Updated: 12 Oct 2019 10:17 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற டிராக்டர் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபாளையம் அருந்ததி காலனியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி கிரிஜா (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 4-ந் தேதி ராஜாபாளையத்தில் ஒரு டிராக்டர் மோதியதில் கன்னிகுளம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (35) என்பவர் படுகாயம் அடைந்தார்.

டிராக்டர் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தை சந்திரன் நேரில் பார்த்ததாக கூறி மோதிய டிராக்டர் டிரைவர் யார்? என்று விசாரணை நடத்த பென்னாலூர்பேட்டை போலீசார் கடந்த 8-ந் தேதி சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு 9-ந் தேதி அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

அப்போது முதல் சந்திரன் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் காலை முதல் அவரை காணவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இருப்பினும் அவரை காணவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் ராஜாபாளையம் கிராம எல்லையில் உள்ள மாந்தோப்பில் உள்ள மரத்தில் சந்திரன் பிணமாக தொங்கியபடி காணப்பட்டார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் போலீசாருடன் உடனே சம்பவ இடதுக்கு விரைந்து சென்று மரக்கிளையில் முட்டி போட்டப்படி மின் வயரால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.

சாலை மறியல்

உடலை ஏற்றிச்சென்ற வாகனத்தை சந்திரனின் உறவினர்கள் மடக்கி சீதஞ்சேரி-பிளேஸ்பாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சந்திரன் எப்படி இறந்தார் என்பதை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின் சந்திரனின் உடல் ஏற்றப்பட்ட வாகனத்தை விடுவித்தனர்.

Next Story