மதுரையில் சாக்குப் பையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள்- கத்திகள்; போலீசார் விசாரணை


மதுரையில் சாக்குப் பையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள்- கத்திகள்; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2019 9:15 PM GMT (Updated: 13 Oct 2019 1:42 PM GMT)

மதுரை அவனியாபுரத்தில் தனியார் கல்லூரி அருகே கிடந்த சாக்குப்பையில் நாட்டு வெடிகுண்டுகள், கத்திகள் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை,

மதுரை அவனியாபுரத்தில் தனியார் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையில் உள்ள பாழடைந்த வீட்டின் அருகே சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி கணேசனுக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து அவரும், அவரது உதவியாளர் தங்கவேலும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அந்த பாழடைந்த வீட்டின் பின்புறம் உள்ள முட்புதருக்குள் சந்தேகப்படும் படியாக வெள்ளை நிற சாக்கு பையும், அரக்கு நிற டிபன் பாக்ஸ் வைக்கும் பையும் இருப்பதை கண்டனர். உடனே அவர்கள் இது குறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த சாக்குப்பையை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் சுமார் 2 அடி நீளமுள்ள 4 பெரிய பட்டா கத்திகள் இருப்பதை கண்டனர். அதைத் தொடர்ந்து டிபன் பாக்ஸ் வைக்கும் பையை திறந்து பார்த்ததில், நூலால் சுற்றப்பட்ட இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், 4 பிளாஸ்டிக் பைகள் மண்எண்ணெய் ஊற்றிய நிலையில் இருந்தன.

அதனை அந்த பகுதியில் வைத்து சென்றவர்கள் யார், எதற்காக அதனை அந்த பகுதியில் வைத்து விட்டு சென்றார்கள், யாரையாவது கொலை செய்யும் நோக்கில் அந்த பொருட்களை மறைத்து வைத்துள்ளார்களா என்ற கோணத்தில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இது தவிர, அந்தப் பகுதியில் உள்ள பழைய குற்றவாளிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி அருகே வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story