தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்


தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 8:30 PM GMT)

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி செஞ்சேரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பள்ளர், தேவேந்திர குலத்தான், மூப்பன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தங்களது சமூகத்தின் பெயரை, ‘தேவேந்திர குல வேளாளர்‘ என மாற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர் பிரிவிலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி கிராம மக்கள் கையில் கருப்பு கொடியேந்தி நேற்று பெரம்பலூர்- துறையூர் சாலையில் செஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த கோபால், ரஞ்சித், பிரபு, சதீஷ், பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வீடுகளில் கருப்பு கொடி பறக்க விடப்பட்டது

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். பட்டியலினத்தவர் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி, இதர பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கிராம பொதுமக்கள், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, புதிய தமிழகம் கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராமத்தின் நுழைவு வாயில் கருப்பு கொடிகளை கட்டி தொங்க விட்டிருந்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி செஞ்சேரி கிராமத்தில் உள்ள வீடுகளிலும் கருப்பு கொடி பறக்க விடப்பட்டது.

Next Story