சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கியது


சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கியது
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 10:22 PM GMT)

மோகனூரில் இயங்கிவரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கப்பட்டது.

மோகனூர்,

மோகனூரில் இயங்கிவரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2019-20-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பணி ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கரும்பை எடுத்துப்போட்டு அரவையை தொடங்கி வைத்தார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., சர்க்கரை ஆலை தலைவர் கே.பி.எஸ்.சுரே‌‌ஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

மேலாண்மை இயக்குனர் சரவணமூர்த்தி தலைமை தாங்கி கூறியதாவது:- இந்த கரும்பு அரவைக்கு சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 கோட்டங்களில் 1,296 ஏக்கர் நடவு கரும்பும், 2,485 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,781 ஏக்கர் கரும்பு அரவைக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கிரய தொகை

கடந்த 2018-19-ம் ஆண்டு கரும்பு அரவை பெறுவதில் கடும் வறட்சியின் காரணமாக 1.27 லட்சம் டன்கள் கரும்பு மட்டுமே அரவை செய்தது. ஆலை அரவைக்கு அனுப்பப்படும் கரும்பிற்கு மத்திய மற்றும் மாநில அரசு அறிவிக்கும், கிரய தொகை, கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி கரும்பு வெட்டி அனுப்பிய 14-வது நாள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சர்க்கரை ஆலை துணைத்தலைவர் வெற்றிவேல் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், கூட்டுறவு கடன் சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், ஆலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story