என்.எல்.சி. புதிய அனல் மின்நிலையத்துக்கு, பர்னஸ் ஆயிலுக்கு பதில் டேங்கர் லாரியில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்து மோசடி


என்.எல்.சி. புதிய அனல் மின்நிலையத்துக்கு, பர்னஸ் ஆயிலுக்கு பதில் டேங்கர் லாரியில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்து மோசடி
x
தினத்தந்தி 13 Oct 2019 10:15 PM GMT (Updated: 13 Oct 2019 11:13 PM GMT)

என்.எல்.சி. புதிய அனல் மின்நிலையத்துக்கு பர்னஸ் ஆயிலுக்கு பதில் டேங்கர் லாரியில் தண்ணீரை நிரப்பி கொண்டு வந்து மோசடி செய்த டிரைவர் மற்றும் கிளனரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் எல்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் நெய்வேலி பகுதியில் திறந்தவெளியில் சுரங்கங்கள் அமைத்து, அதில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரியை தோண்டி எடுத்து அனல் மின்நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மணிக்கு 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய அனல் மின்நிலையம் அமைக்கும் பணியை தொடங்கியது. 2 அலகுகளில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதே, அந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதில் ஒரு அலகில் பணி முடிவடைந்து மணிக்கு 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. மற்றொரு அலகில் மணிக்கு 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் அலகில் நிலக்கரியை எரிப்பதற்காக பர்னஸ் ஆயில்(எரிபொருள்) பயன்படுத்தப்படுகிறது.

இந்த பர்னஸ் ஆயில், சென்னை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் நெய்வேலிக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் டேங்கர் லாரியில் பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக தண்ணீர் கலந்து கொண்டு வருவதாக என்.எல்.சி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பர்னஸ் ஆயில் ஏற்றிக்கொண்டு புதிய அனல் மின்நிலையத்துக்கு வந்த டேங்கர் லாரியை மறித்து, என்.எல்.சி. இளநிலை பொறியாளர் சவுந்தர்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த லாரியின் டேங்கரில் 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் 2 பிரிவுகளில் பர்னஸ் ஆயில் இருந்தது. மற்ற 2 பிரிவுகளில் பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக தண்ணீர் இருந்தது. இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக தண்ணீரை கொண்டு வந்து மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து இளநிலை பொறியாளர் சவுந்தர்ராஜன், தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த முத்து மகன் தமிழ்செல்வன்(வயது 36), கிளனரான வீமராஜ் மகன் அஜித்குமார்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டிரைவரும், கிளனரும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் லிட்டர் பர்னஸ் ஆயிலை டேங்கர் லாரியில் ஏற்றிக்கொண்டு நெய்வேலிக்கு புறப்பட்டதும், வரும் வழியில் 10 ஆயிரம் லிட்டர் பர்னஸ் ஆயிலை விற்றதும், அதற்கு பதிலாக 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை டேங்கர் லாரியில் நிரப்பி மோசடி செய்ததும் தெரியவந்தது. 10 ஆயிரம் லிட்டர் பர்னஸ் ஆயிலின் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

இந்த பர்னஸ் ஆயில் மோசடி பல நாட்களாக நடந்திருக்கலாம் என்றும், இதன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதும், இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த வழக்கில் லாரியின் உரிமையாளரான சென்னையை சேர்ந்த கண்ணன் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை பிடிப்பதற்காக போலீசார் சென்னைக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story