திண்டிவனத்தில், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளருக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது


திண்டிவனத்தில், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளருக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2019 10:15 PM GMT (Updated: 14 Oct 2019 2:10 PM GMT)

திண்டிவனத்தில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் அவரைபாக்கத்தை சேர்ந்தவர் சையது மக்தும் மகன் சையத் ஹசன் (வயது 40). இவர் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திண்டிவனம் ரோ‌ஷணை பகுதியை சேர்ந்த ராஜாமுகமது(35) என்பவருக்கும், அவரது மனைவி ரெஜினாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த சையத் ஹசன் தகராறில் ஈடுபட்ட கணவன்–மனைவி இருவரையும் சமாதானப்படுத்தினார். மேலும் ரெஜினா வெளிநாடு செல்வதற்கு சையத் ஹசன் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த ராஜா முகமது, நேற்று முன்தினம் இரவு திண்டிவனம்– செஞ்சி சாலையில் உள்ள தியேட்டர் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த சையத் ஹசனை வழிமறித்து, அவரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரோ‌ஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாமுகமதுவை கைது செய்தனர்.

Next Story