போடிமெட்டு மலைப்பாதையில் உடல் வீச்சு: இளம்பெண் கற்பழித்து கொலை?


போடிமெட்டு மலைப்பாதையில் உடல் வீச்சு: இளம்பெண் கற்பழித்து கொலை?
x
தினத்தந்தி 14 Oct 2019 10:00 PM GMT (Updated: 14 Oct 2019 4:17 PM GMT)

போடிமெட்டு மலைப்பாதையில் பிணமாக கிடந்த இளம்பெண், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி,

தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்ல போடிமெட்டு மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையின் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 100 அடி பள்ளத்துக்குள் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குரங்கணி போலீசார், போடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கயிறு கட்டி அந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு தீயணைப்பு படையினர் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் இளம்பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்து கிடந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளம்பெண் உள்ளூர் நபராக இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

இதனால் வேறு எங்கேயோ வைத்து அந்த பெண்ணை கொலை செய்து விட்டு, வாகனங்களில் கொண்டு வந்து மலைப்பாதையில் இருந்து பள்ளத்துக்குள் உடலை வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த பெண் இறந்து ஒரு வாரம் இருக்கும். உடல் அழுகி, முகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

அந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்குள் காணாமல் போனவர்களின் விவரங்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிணமாக கிடந்த இளம்பெண் யார்? என்பது தெரிந்த பிறகு தான் அவர் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story