ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கரூர்-குளித்தலையில் தொடக்கம்


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கரூர்-குளித்தலையில் தொடக்கம்
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 8:22 PM GMT)

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கிழ் மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் பொருட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு கரூர் மற்றும் குளித்தலையில் தொடங்கியது.

கரூர்,

கரூர் கல்வி மாவட்டத்தில் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (சமக்ரா சிக்‌ஷா) திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் பொருட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான முழு மேம்பாட்டு முன்னேற்பு பயிற்சி (நி‌‌ஷ்தா பயிற்சி) தொடங்கி நடந்தது. உதவி திட்ட அதிகாரி மகாலிங்கம் தலைமை தாங்கினார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான், என்.புதூர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வள்ளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தாளர்கள் பாலசுப்ரமணியம், கார்த்திகேயன், லாவண்யா, ஆனந்தி, தினே‌‌ஷ்குமார் ஆகியோர் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கணினி தொடுதிரையை பயன்படுத்தி பயிற்சி அளித்தனர்.

வாழ்வியலோடு தொடர்புபடுத்தி பாடம் நடத்த...

அப்போது, மாணவர்களை வெறுமனே பாடத்தை மட்டும் மனப்பாடம் செய்து படிக்க வைக்காமல், பாடத்திட்டத்தினை வாழ்வியலோடு புகுத்தி செயல்பாடுகளில் ஈடுபட செய்ய வேண்டும். ரெயில்டிக்கெட் பதிவு செய்தல், வங்கியில் பரிவர்த்தனையை மேற்கொள்ள விண்ணப்பித்தல், அரசு அலுவலக சேவையை பெறுதல் போன்ற அன்றாடம் மக்கள் பயன்படுத்துகிற செயலை மாணவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மேலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, சுற்றுப்புறசூழல் மேம்பாட்டிற்கான சமூக வளர்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்துவது போன்றவற்றிற்கு ஆசிரியர்கள் வழிவகுக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் கணினி, ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்து அதனை மாணவர்களுக்கு தெரிவிப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சியின் போது எடுத்துரைக்கப்பட்டது.

கல்வி அதிகாரி பார்வையிட்டார்

இதற்கிடையே கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிரு‌‌ஷ்ணன் பயிற்சி வகுப்பினை பார்வையிட்டார். அப்போது, தற்போதைய நாகரிக உலகில் மாணவர்கள் தொழில்நுட்பத்தை கையாள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சிலர் செல்போன் மோகத்தால் படிப்பிலிருந்து திசைதிரும்பி செல்வதையும் காண முடிகிறது. எனவே மாணவர்களின் ஒழுக்கத்துக்கு உந்துதலாக இருந்து அவரை ஆசிரியர்கள் நல்வழிப்படுத்திட வேண்டும் என்றார். இந்த பயிற்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டீஸ்வரி செய்திருந்தார். இதே போல் குளித்தலை கல்வி மாவட்டத்திலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பு தொடர்ந்து 5 நாட்கள் நடக்கின்றன. மொத்தம் தொடக்க, உயர்நிலை பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 3,069 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பயிற்சிக்கு பிறகு அவர்கள், அதனை பள்ளியில் மாணவர்கள் பாடம் கற்பிக்கும்போது செயல்படுத்த உள்ளனர்.


Next Story